நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மழை, வெள்ளப்பெருக்கு காற்றுடன் கூடிய தற்போதைய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரணித்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் காணாமற் போயுள்ளனர். அத்துடன், சீரற்ற வானிலையால் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 10 மாவட்டங்களைச் சேர்ந்த 67,613 குடும்பங்களைச் சேர்ந்த 271,110 பேர் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த பகுதிகளிலுள்ள 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 5,658 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 72 நலன்புரி மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை நாட்டில் 14 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், மேலும் 817 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
இந்நிலையில், மழை, இடி, மின்னல், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.