சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (வயது 95). இவரது கணவர் பொலிஸ்காரராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ராதாவுக்கு 4 மகன்கள், இதில் 2 மகன்கள் இறந்து விட்டனர். இதை அடுத்து கடைசி மகனான ஸ்ரீதர் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். ஸ்ரீதர் டால்மியா போர்டில் பணிபுரிந்தார்.மேலும் ராதாவுக்கு அரசின் சார்பில் பென்சன் தொகையும் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
நேற்று ஸ்ரீதர் வசித்துவந்த வீட்டின் பின்புற பகுதியில் இருந்து பெண் ஒருவரின் அழுகுரல் கேட்டது. இதனை அறிந்த அந்த பகுதியினர் அருகில் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கழிவறையில் ராதா உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்தது தெரியவந்தது.
தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெற்ற மகனே மூதாட்டியை கழைவறையில் தங்க வைத்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவம் குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லம் நடத்திவரும் போதிமரம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போதிமரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாவை மீட்டு முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். மேலும் அவருக்கு தேவையான உதவிகளையும் செய்தனர்.
இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.