கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு இனவெறி தாக்குதலாக இருக்கலாம், என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..,
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர்கள் மீது காரை மோதினார்.
இதில் அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் அவர்கள் கார் சக்கரங்களில் சிக்கி நசுங்கினர்.
இக் கோர சம்பவத்தில் 74 மற்றும் 44 வயதான 2 பெண்கள், 46 வயதான ஒரு ஆண் மற்றும் 15 வயதான சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் அந்த குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பினான். அதனை தொடர்ந்து காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார், படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளியை பொலிசார் தேடினர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அந்த வாலிபரை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்தது. எனவே இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அந்த கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.