ஐ.சி.சி டெஸ்ட் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூன்று இந்திய வீரர்கள் தொடர்ந்து முதல் 10 இடங்களில் உள்ளனர்.
மேலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 895 மதிப்பீட்டு புள்ளிகளுடன் அட்டவணையில் முன்னிலை வகிக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளார். அவர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய அணி வீர்ரகளான ரிஷப் பந்தும் ரோகித் ஷர்மாவும் 747 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளனர். முன்னர் எட்டாவது இடத்தில் இருந்த ரோகித் ஷர்மா, நியுசிலாந்து வீரர் ஹென்ரி நிக்கோல்சை விட ஒரு இடம் மேலே முன்னேறியுள்ளார். ஹென்ரி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த வார துவக்கத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அறிமுக வீரர் கான்வே இரட்டை சதத்தை அடித்தார். இதன் மூலம் அவர் ஐ.சி.சி தர வரிசைப் பட்டியலிலும் இடம் பெற்று விட்டார். 447 புளளிகளுடன் அவர் 77 ஆவது இடத்தில் உள்ளார். அறிமுக டெஸ்டிலேயே எந்த நியூசிலாந்து டெஸ்ட் ஆட்டக்காரரும் செய்யாத சாதனையாகும் இது.
அத்துடன், டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 908 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இந்த தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்தியர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் உள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டி ஜூன் 10 ஆம் தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.
இந்திய ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடனும் அஸ்வின் 353 புள்ளிகளுடனும் முறையே இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர். ஜடேஜா ஒரு படி மேலே வந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சின் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18 ஆம் திகதி அன்று ஆரம்பிக்க உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்கு தலைமை வகிக்கிறார்.
இதற்குப் பிறகு இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.