பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய தினமாக கொண்டாடப்படுகிறது.
எந்தக் கிழமையில் நாம் விளக்கேற்றா விட்டாலும், வெள்ளிக்கிழமையில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விடுவது உண்டு. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாளாக இருப்பதால் அன்றைய நாள் இறை வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அம்பாளுக்கு இந்தப் பூவை வைத்து வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் கேட்ட வரம் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கௌரி என்பது அம்பாளை குறிக்கும் ஒரு சொல்லாகும். உலக மக்களுக்கு தாயாக இருந்தாலும் அவள் கன்னியாகவே பாவிக்கப்படுகிறாள். ஆகவே இவளை வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் கேட்ட படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மரங்களில் புன்னை மரம் என்பது இயற்கை அளித்த அருட்கொடையாகும். புன்னை மரத்தில் அதிக மலர்கள் பூத்துக் குலுங்குவதை வைத்து அந்த காலத்தில் மழை பொழிவை தீர்மானித்து வந்ததாகவும் சான்றுகள் உள்ளன.
மேலும், புன்னை மரக்கொட்டை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயிலிருந்து தான் முந்தைய காலங்களில் வீடுகளில் விளக்கை எரித்து பயன்படுத்தி வந்தனர். வீடுகள் மட்டுமல்லாமல் சாலையில் இருக்கும் தெரு விளக்குகளும் இந்த எண்ணெய் தான் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மிகவும் வலிமையான மரம் என்பதால் இம்மரம் புயலுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. பூச்சி, கரையான் என்று எதுவும் இந்த மரத்தை அரிக்க முடியாது எனவே இம்மரத்தை படகுகள் கட்டவும், மர சாமான்கள் செய்யவும் பெரும்பாலும் உபயோகப்படுத்துகின்றனர்.
அத்துடன், மருத்துவ ரீதியாகவும், மனிதப் பயன்பாட்டுக்கும் நிறைய வகையில் உதவி செய்யும் இந்த புன்னை மரம் ஆன்மீகத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. புன்னை மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு சக்திகள் அதிகம். புன்னை மர விநாயகரை வழிபட்டால் தடைபட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களும் தடையில்லாமல் நடந்தேறும்.
இத்தகைய புன்னை மரத்திற்கு அடியில் அம்பாளை வைத்து சர்க்கரை பொங்கல் நிவேதனம் படைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து மரத்தை சுற்றிலும் 108 முறை வலம் வந்து வணங்கினால் வேண்டிய வரமெல்லாம் கிடைக்குமாம்.
அபிராமி அந்தாதி :
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்,
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்,
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்,
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
புன்னை மரத்தை வைத்து வழிபட முடியாதவர்கள் புன்னை மர பூக்களை கொண்டு தாராளமாக வழிபடலாம். புன்னையில் கௌரி வசிக்கின்றாள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புன்னை மர பூவை கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து, நெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை உச்சரித்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். தீரா கஷ்டங்களும் விரைவில் தீரும்.
எத்தகைய வேண்டுதல்களும் அம்பாளிடத்தில் இந்த வழிபாடு செய்து விரதம் இருந்து கேட்டால் நிச்சயம் நிறைவேறும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் எடுத்துக் கொண்டு கௌரி விரதம் இருக்கலாம்.
மேலும், நிவேதனம் படைத்த சர்க்கரை பொங்கலை விரதம் இருப்பவர்களும், அவர்கள் வீட்டில் இருப்பவர்களும் பிரசாதமாக உட்கொள்ளலாம். புன்னை மர பூவைக் கொண்டு கௌரி விரதம் மேற்கொண்டால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும், வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறியாக வேண்டும் என்பது நியதி.
எனவே எப்போதும் போல வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றும் பொழுது மனதார கௌரியை நினைந்து கௌரி விரதத்தை மேற்கொண்டு நல்ல பலன்களைப் பெறுவோம்.