நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
மேலும், இரத்த சோகையைப் போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
அந்தவகையில் இன்று வல்லாரை கீரை பொரியல் எப்படி செய்வதென்று தெரியுமா..?
தேவையான பொருட்கள் :
வல்லாரை கீரை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 5 பல்
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 1 மேஜை கரண்டி
தாளிக்க :
கடுகு, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கிய பின்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
* கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சத்தான வல்லாரை கீரை பொரியல் ரெடி… 🙂