“வேலை தேடு அல்லது வெளியே போ” என தந்தை கூறியதில் ஆத்திரமுற்ற வாலிபர் தனது குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொன்றுள்ளார்.
அமெரிக்காவின் அயோவா பகுதியில் வசித்து வந்தவர் ஜேன் ஜாக்சன் (வயது 61). இவரது மனைவி மெலிசா ஜாக்சன் (வயது 68). இவர்களது மகன் அலெக்சாண்டர் ஜாக்சன் (வயது 20). இவரது சகோதரி சபரீனா ஜாக்சன் (வயது 19).
இந்நிலையில், தனது வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் புகுந்து தன்னையும், தனது தந்தையையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடி விட்டான் என அலெக்சாண்டர் பொலிசிடம் தொலைபேசி வழியே பதற்றத்துடன் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அதிவிரைவு பொலிஸ் படை சம்பவ பகுதிக்கு சென்றது. அந்த பெரிய வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் சுடப்பட்டு கிடந்துள்ளனர். அலெக்சாண்டர் காலில் காயத்துடன் கிடந்துள்ளார்.
அந்த மர்ம மனிதருடனான போராட்டத்தில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயமேற்பட்டது என அவர் கூறியுள்ளார். எனினும், வீட்டில் மர்ம நபர்கள் புகுந்ததற்கான அடையாளங்களோ, கொள்ளை நடந்ததற்கான சான்றுகளோ காணப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதில், ஜாக்சனின் தந்தை மகனிடம், வேலை தேடும் பணியை தொடங்கு. சீக்கிரம் வேலைக்கு போ என கூறியுள்ளார். அல்லது வெளியே போ என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், ஜாக்சன் ஆத்திரமடைந்து குடும்பத்தினரை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை கொன்றதற்காக ஜாக்சன் கைது செய்யப்பட்டு லின் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.