அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று கொண்ட பின்னர், கொரோனா தடுப்பூசி பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார். வருகிற ஜூலை 4 ஆம் திகதிக்குள் அமெரிக்காவில் வயது வந்தோரில் 70 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்று விட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகள் நடந்தன.
இந்நிலையில், பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,
அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. ஆனால், நான் ஆட்சி பொறுப்பேற்றபோது நமது நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தது.
150 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நிலைமை எப்படி இருந்தது என நினைவுப்படுத்தி கொள்ளுங்கள். அமெரிக்கர்கள் அனைவருக்கும் போதிய தடுப்பூசி விநியோகம் என்பது நம்மிடம் இல்லை.
ஆனால், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு அதனை மாற்றியுள்ளோம் என அதிபர் பைடன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் “டெல்டா பிளஸ்” ஆக தொடர்ந்து உருமாறி வருகிறது என்றும் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, நேற்று வரை வயது வந்தோரில் 65 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.