டோக்கியோ 2020 பரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன. கொவிட்- 19 கட்டுப்பாடுகளால் அரங்கத்தில் வெகுசிலரே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர்.
பாராலிம்பிக் போட்டியில் புதன்கிழமை (25) முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், முதல் தங்கப் பதக்கத்தை அவுஸ்திரேலிய சைக்கிளிங் வீராங்கனை பெய்ஜ் கிரேகோ வென்றார்.
மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் “சி1 2 3” 3000 மீட்டர் பிரிவில் பெய்ஜ் கிரேகோ 3 நிமிஷம் 50.81 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.
சீனாவின் வாங் ஜியாவ்மெய் 3 நிமிஷம் 54.97 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஜெர்மனியின் டெனிஸ் ஷின்ட்லர் 3 நிமிஷம் 55.12 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனர். கிரேகோவுக்கு இது முதல் பாராலிம்பிக் பதக்கமாகும்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் முதல் நாளில் 7 விளையாட்டுகளில் 24 பதக்க போட்டிகள் நடைபெற்றன.
1964ஆம் ஆண்டுக்குப் பிறகு டோக்கியோ இரண்டாம் முறையாக பரா ஒலிம்பிக்கை ஏற்று நடத்துகிறது. 162 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,400 போட்டியாளர்கள், 22 விதமான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
மேலும், பெட்மிண்ட்டன், தேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகள் பரா ஒலிம்பிக்கில் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளன. போட்டிகள் அடுத்த மாதம் 5ஆம் திகதிவரை நடைபெறும்.