ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நிகழ்த குண்டுவெடிப்பில் குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு முழுமையாக தலீபான்கள் கைப்பற்றினார். அங்கு புதிய ஆட்சியை அமைக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சூழலில் காபூல் விமான நிலைய நுழைவு வாயிலில் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானிய மக்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இன்று (வியாழக்கிழமை) ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
விமான நிலையத்தின் நுழைவு வாயில் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பேர் இந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தலீபான் அதிகாரி ஒருவர் கூறுகையில்…,
“குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் தலீபான் காவலர்கள் பலர் குண்டுவெடிப்பில் காயமடைந்தனர்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் குறைந்தது நான்கு அமெரிக்க ராணுவ வீரர்களும் காயமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் குண்டுவெடிப்பில் சிலர் உடல் உறுப்புகளை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.