இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 78 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் (121 ரன்) 432 ரன்கள் குவித்தது.
அடுத்து 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது.நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து இருந்தது. புஜாரா 91 ரன்களுடனும் ( 180 பந்து, 15 பவுண்டரி), கேப்டன் கோலி 45 ரன்களுடனும் (94 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று 4 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா மேற்கொண்டு ரன்கள் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அரை சதம் அடித்த நிலையில், விராட் கோலி (55 ரன்கள்) பெவிலியன் திரும்பினார்.
ரகானேவும் 10 ரன்களில் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரிஷப் பண்ட், ராபின்சன் ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், இந்திய அணி 99.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 278- ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.