திண்டுக்கல்லில் இன்று ஒரே நாளில் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..,
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரைப் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு பொலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த 18 பேரில் முத்துபாண்டி, புறா மாடசாமி உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி காலணியைச் சேர்ந்த நிர்மலா தேவி என்பவர் மர்ம நபர்களால் இன்று காலை தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் இ.பி காலணி பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த நிர்மலா தேவியை, மர்ம நபர்கள் தலையைத் துண்டித்து எடுத்து நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.
தாடிக்கொம்பு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிர்மலாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி சீனிவாசன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
பசுபதி பாண்டியனிடம் செல்போனில் பேசி வீட்டைவிட்டு வெளியே வரவழைத்தது, மற்றும் அவரை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது எனப் பசுபதி பாண்டியன் கொலைக்கு நிர்மலா தேவி உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழிக்குப்பழி பட்டப்பகலில் தெருவில் நின்றுகொண்டிருந்த பெண் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், திண்டுக்கல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே, திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த ஸ்டீபன் என்ற இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற கொலையைப் போலவே இதிலும் கொலை செய்யப்பட்டவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த இரண்டு படுகொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் இன்று ஒரே நாளில் இரண்டு பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு கொலைகள் குறித்தும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.