ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மணல் புயல் வீசியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் விளாசினார். அவர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த டிவில்லியர்ஸ் 12 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக ஆடிய படிக்கல் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் வந்த பெங்களூரு வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்களில் கேட்ச் ஆனார். டுபிளிசிஸ் 31 ரன்களிலும், மொயீன் அலி 23 ரன்களிலும் கேட்ச் கொடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். சுரேஷ் ரெய்னா(17 ரன்கள்), கேப்டன் தோனி(11 ரன்கள்) இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியாக, சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளும், சாஹல் மற்றும் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.