குறும்செய்திகள்

அனைத்து வகையான தங்க நகைகளையும் பராமரிக்கும் வழிமுறைகள்..!

ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது. முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என எந்த நகைகளாக இருந்தாலும் அவற்றை உரிய முறையில் பராமரித்து பாதுகாத்தால் மட்டுமே அவை பல தலைமுறைகளையும் தாண்டி மிகவும் பிரகாசமாகவும், உறுதியாகவும் நம்முடன் பயணம் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தலைமுறைகளைத் தாண்டி பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் நாம் அவற்றை உபயோகப்படுத்தும் காலத்திலேயே அவை பழைய நகைகள் போன்ற தோற்றத்தை தராமல் இருப்பதற்கு அவற்றுக்கு சரியான பராமரிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.

தங்க நகைகள் தங்கத்தினால் செய்த நகைகளை அன்றாடம் உபயோகப்படுத்தும் பொழுது அவற்றில் நாம் தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் எண்ணை, முகத்திற்கு பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் போன்றவை படிந்து விரைவிலேயே பொலிவிழந்து பழைய நகை போன்ற தோற்றத்தை தரத் துவங்கிவிடும். அழுக்குப் படிந்து பொலிவிழந்து இருக்கும் நகைகளை மாதம் ஒருமுறையாவது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மிக மென்மையான ஷாம்பு கலந்து அதில் ஊறவைத்து மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவலாம்.

அதேபோல் நகைகளை அடிக்கடி சுத்தம் செய்வதும், கடினமான பிரஷ் கொண்டு கழுவுவதும், துணி துவைக்கும் சோப்பை உபயோகப்படுத்தி சுத்தம் செய்வதும் கூடாது.மிகவும் நவீன தோற்றத்துடன் வரும் நகைகளை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு மெல்லிய பருத்தித் துணியில் துடைத்து, ஆறவைத்து பின்பு நகைகளை தனித்தனியாக வைப்பதற்கு என்று இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும். எப்பொழுதும் ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது.

நகைகளை சேர்த்து வைக்கும் பொழுது அவை ஒன்றுடன் ஒன்று உரசி தேய்மானத்தை ஏற்படுத்திவிடும்.அதுமட்டுமல்லாமல் அவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து அவற்றை எடுக்கும் பொழுது சேதாரத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை ஒரே பெட்டியில் வைக்க நேரிட்டாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக மெல்லிய துணிகளில் சுற்றி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

முத்து நகைகள் எப்பொழுதுமே முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.முத்துக்கள் மிகவும் மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.முத்தினால் செய்த மாலைகள், நெக்லஸ்கள் மற்றும் ஹாரம் போன்றவற்றை தொங்கிய நிலையிலேயே வைக்கக்கூடாது. இவ்வாறு தொங்கவிடும் பொழுது முத்துச் சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது.

முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவலாம்.முத்து நகைகளை அணிந்து கொண்டு ஹேர் டிரையர் உபயோகிப்பது, ஒப்பனை செய்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.ஒப்பனை பொருட்களில் இருக்கும் ரசாயனங்களும், ஹேர் டிரையரில் இருந்து வரும் அதிகப்படியான சூடான காற்று முத்துக்கள் நிறம் மாறுவதற்கும், விரிசல் அடைந்து உடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

இதையும் படியுங்கள்: கல் வைத்த நகைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? பவள நகைகள் இந்த நகைகள் நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப் படியான சூட்டினால் நிறம் மாற வாய்ப்புள்ளது. நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் எண்ணெய் மற்றும் ஸ்பிரே, துணிகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் ரசாயனங்கள் பவள நகைகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பு கலந்த நீரில் துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம். கல் வைத்த நகைகள் வைரம், ரூபி, எமரால்டு, நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.

எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும். நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது. இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள். நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது. அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.

நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது. மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும்.

மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும். இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Related posts

ஆண்களை விட பெண்கள் தான் சிக்கனவாதிகள்..: ஏன் தெரியுமா..!

Tharshi

10 Ways to Make Extra Money as a Graphic Designer

Tharshi

மனதின் சுமையை குறைக்க உதவும் புன்னகை..!

Tharshi

3 comments

Leave a Comment