சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் “எஞ்ஜாய் எஞ்சாமி” பாடலைத் தயாரித்துள்ளது.
ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான தீ, “உசுரு நரம்புல” (இறுதிச்சுற்று), “கண்ணம்மா” (காலா), “ரவுடி பேபி” (மாரி 2), “காட்டுப்பயலே” (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
காலா படத்தில் “உரிமை மீட்போம்”, வட சென்னை படத்தில் “மத்திய சிறையிலே”, மாஸ்டர் படத்தில் “வாத்தி ரெய்டு” உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் “எஞ்ஜாய் எஞ்சாமி” ஆல்பம் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த “எஞ்ஜாய் எஞ்சாமி” என்கிற பாடலின் வீடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார்.
சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள “மாஜா தளம்” இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.
யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை எஞ்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது.
தற்போது இப்பாடலை 25 கோடி முறை பார்த்துள்ளனர். ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், சுயாதீனப் பாடல்களில் “எஞ்ஜாய் எஞ்சாமி” ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவே சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.