ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொன்று புதைக்கப்பட்ட சிறைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா, ரஷியா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்தபோது நூற்றுக்கணக்கான மக்களை கொன்று புதைத்தது. அவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தற்போது மிகப்பெரிய அளவில் கண்டுடெடுக்கப்பட்டு வருகிறது.
ஈராக்கில் மட்டும் இதுவரை 200 இடங்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு புதைக்கப்பட்டவர்களில் இதுவரை 12 ஆயிரம் பேரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈராக்கின் முசோல் மாகாணத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 123 பேரின் உடல்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முசோல் மாகாணத்தில் உள்ள படோஸ் நகர சிறைச்சாலைக்குள் நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட கைதிகளை கொடூரமாக கொலை செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஷியா முஸ்லீம்கள் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட அனைவரின் உடல்களையும் அப்பகுதியிலேயே ஐஎஸ் பயங்கரவாதிகள் புதைத்துள்ளனர். தற்போது, அந்த பகுதியில் இருந்து புதைக்கப்பட்ட கைதிகளின் உடல்களை தோண்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 123 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியோரின் உடல்களை தோண்டி எடுக்கும் பணியில் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தோண்டி எடுக்கப்பட்ட உடல்களை டிஎன்ஏ பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தி உயிரிழந்தது யார்? மற்றும் அவர்களது உறவினர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.