ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை எல்ஜி ஸ்டோர் மூலம் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து எல்ஜி நிறுவனம் விலகிவிட்டது. தென் கொரியாவில் எல்ஜி நிறுவனம் சுமார் 400-க்கும் அதிக எல்ஜி பெஸ்ட் ஷாப் விற்பனை மையங்களை கொண்டுள்ளது.
இங்கு எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகியதால் இந்த விற்பனை மையங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன.
இந்நிலையில், விற்பனை மையங்களை பயன்படுத்த எல்ஜி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதன்படி எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன்கள் விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் தென் கொரியாவில் மட்டுமே செயல்படுத்தப்பட இருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எள்ஜி பெஸ்ட் ஷாப்கள் இருப்பதால், ஆப்பிள் தனது சில்லறை விற்பனையை இவற்றை கொண்டு அதிகப்படுத்த முடியும். ஜூலை மாத இறுதி வரை தென் கொரியாவில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச், ஐபேட் மற்றும் இதர அக்சஸரீக்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.