இந்தியாவில் மேலும் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,321 பேர் இந்த தொற்றால் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்தியாவில், நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் மேலும் 54 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதுவரையில் நாட்டில் இந்த தொற்றின் பிடியில் அகப்பட்டிருப்போர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 82 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 469 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதன் பாதிப்பு விகிதம் 2.91 சதவீதம் ஆகும். தொடர்ந்து 17-வது நாளாக பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்குள் அடங்கியது. இதேபோல் வாராந்திர பாதிப்பு விகிதமும் 3.04 சதவீதமாக பதிவானது.
நேற்று முன்தினம் கொரோனாவால் 1,358 பேர் உயிரிழந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,321 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.30 சதவீதமாக தொடர்கிறது.
நேற்று மராட்டிய மாநிலத்தில் 508 பேரும், கேரளாவில் 150 பேரும், கர்நாடகத்தில் 123 பேரும் கொரோனாவால் இறந்தனர்.
இருப்பினும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், தத்ராநகர்ஹவேலி டாமன் டையு, லடாக், லட்சத்தீவு, நாகலாந்து, சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களும், யூனியன் பிரதேங்களும் நேற்று தப்பியது ஆறுதல் அளிப்பதாக அமைந்திருக்கிறது.
நேற்று தொடர்ந்து 42-வது நாளாக தொற்று பாதித்தோர் எண்ணிக்கையை விட அதில் இருந்து மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 54 ஆயிரத்து 69 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், 68 ஆயிரத்து 885 பேர் மீட்கப்பட்டு, வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரையில் நாட்டில் 2 கோடியே 90 லட்சத்து 63 ஆயிரத்து 740 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு விகிதம் 96.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக நேற்று 13 ஆயிரத்து 683 பேர் மீட்கப்பட்டனர்.
நாட்டில் நேற்று காலை நிலவரப்படி 6 லட்சத்து 27 ஆயிரத்து 57 பேர் மட்டுமே பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 16 ஆயிரத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் 2.08 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.