திடீரென வாட்ஸ்அப்புக்கு வந்த ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வக்கீல் ஒருவர், ஆபாச படங்களை அனுப்பிய காமுகனை கம்பி எண்ண வைத்துள்ளார். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..,
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த பெண் வழக்கறிஞர். அவரின், வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் வக்கீல், அதிர்ச்சியடைந்தார். பதில் மெசேஜ் போட்டு, இதுபோன்று அனுப்பாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.
இருப்பினும் கேட்பதாக இல்லை அந்த நபர். வேறு வேறு எண்கள் மூலம் பெண் வழக்கறிஞருக்கு அந்த நபர் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் இதுதொடர்பாக மாநகர சைபர் க்ரைம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மர்ம நபரின் தொலைபேசி எண்ணை வைத்து பொலிசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது தொலைபேசி எண் என கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து பொலிசார் கார்த்திக்கை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலிசார் தக்க முறையில் விசாரணை நடத்தி கேட்டபோது, அவர்தான் அந்த பெண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்ணின் நம்பர் இவருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.