அவுஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி-20 தொடரில், 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டனாக உள்ள ஆரோன் பிஞ்ச், காயம் காரணமாக முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோன் பிஞ்ச் காயம் காரணமாக விலகியதால், முதலாவது ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி, அவுஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக பொறுப்பில் இருந்தார். தற்போது அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான பதவியேற்கும் 26வது நபர் என்ற பெருமையை அலெக்ஸ் கேரி பெற்றுள்ளார்.