நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதுடன், பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை தழுவினார்.
இவ்வாறு அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட குஷ்பு, டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வந்தார். குஷ்புவை டுவிட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டு உள்ளது. அதில் அவர் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளும் அழித்து ஹேக்கர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
மேலும் அவரின் டுவிட்டர் பக்கத்தின் பெயர் “khushsundar” என்பதற்கு பதிலாக “briann” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.