பாகிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், பயிர்களை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன் மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் காணாமல் போனார்கள்.
இதேபோன்று கெச் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 11 பயணிகளை சுமந்து கொண்டு சென்ற வாகனம் ஒன்று முர்க் அப் நடி என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு பணிகள் நடந்தன. இதில், வயது முதிர்ந்த பெண் உள்பட 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 2 குழந்தைகளை காணவில்லை.
இச்ச் சூழலில், பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளத்துக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என அரசு செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி கூறியுள்ளார்.
மேலும், வெள்ளத்தினால் 18 பேர் காயமடைந்து உள்ளனர். 18 வீடுகள் மற்றும் பயிர்களும் சேதமடைந்து உள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி பகுதியளவில் சேதமடைந்துள்ளன.