ஈகுவடார் நாட்டில் குவாகுயில் நகர சிறையில் கடந்த 28 ஆம் திகதி இரு போட்டி கும்பல்கள் இடையே மோதல் வெடித்த பலி எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது.
ஈகுவடார் நாட்டில் குவாகுயில் நகர சிறையில் கடந்த 28 ஆம் திகதி, இரு போட்டி கும்பல்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது இரு கும்பல்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் தொடுத்தனர்.
இதில் 24 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் பலி எண்ணிக்கை 100 ஐக் கடந்து 116 ஆக பதிவாகி உள்ளதாக இப்போது கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
இந்த மோதலில் 5 கைதிகள் தலைகள் துண்டிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
பொலிஸ் உயர் அதிகாரி பாஸ்டோ புவானாகோ இந்த மோதல் பற்றி கூறுகையில்..,
“கைதிகள் கையெறி குண்டுகளை சரமாரியாக வீசி உள்ளனர். 400 போலீசார் திரண்டு வந்த பின்னர்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. மோதலில் ஈடுபட்ட கைதிகள், ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு போவதற்கு சுவரை துளை போட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
ஈகுவடார் சிறைத்துறை இயக்குனர் பொலிவர் கார்சான் கூறும்போது..,
“இந்த மோதல் மிக பயங்கரமானது. கையெறி குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன” என தெரிவித்தார். 80 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்தள்ளது.
ஈகுவடாரில் செயல்பட்டு வருகிற மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் கட்டளையின்பேரில் தான் இந்த மோதல் வெடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும், இந்த பயங்கர சம்பவத்தையடுத்து அந்த நாட்டில் உள்ள சிறைகள் அமைப்பில் அவசரகால நிலையை அதிபர் கில்லர்மோ லாசோ பிறப்பித்துள்ளார்.