இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே 11 நாட்கள் நடைபெற்ற சண்டை இன்று முடிவுக்கு வந்தது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.
காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10 ஆம் திகதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தினர்.
அத்துடன், காசா முனையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 11 நாட்கள் நடந்த சண்டை இன்று முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் இரு தரப்பும் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளன. காசா முனையில் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும், இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 257 பேரும், மேற்கு கரை பகுதியில் 27 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் ( கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர்.
எனினும், சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் தற்போதைய ஒப்பந்தம் எந்நேரமும் முடிவுக்கு வரலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.