பீகாரில் 117 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோயை ஒரு தொற்று நோயாக பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளுடன், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோயும் பரவி தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதனால், ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதனை தொற்று நோயாக அறிவித்தன. தமிழக அரசும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தது. இதேபோன்று ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்துள்ளது.
டெல்லியில் தேவைப்பட்டால் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவிப்போம் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார். கருப்பு பூஞ்சை நோய், மக்களின் எதிர்ப்பு சக்தி மீது பாதிப்பு ஏற்படுத்த கூடியது. ஸ்டீராய்டு மருந்து அதிகம் பயன்படுத்துவோருக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், பீகாரில் 117 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த நோயை பீகார் பேரிடர் மற்றும் பெருந்தொற்று சட்டத்தின் கீழ் ஒரு தொற்று நோயாக பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார். இதனை முதல் மந்திரி அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.