சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்களை மர்ம நபர் ஒருவர் திடீரெனெ கத்தியால் குத்தியதில் 6 பேர் பலியானதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக் கூடங்களில் அடிக்கடி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்களை மர்ம நபர் ஒருவர் திடீரெனெ கத்தியால் குத்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.
எனினும் அந்த மர்ம நபர் சற்றும் ஈவு இரக்கமில்லாமல் கண்ணில் பட்டவர்களையொல்லாம் கத்தியால் குத்தினார். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தாக்குதலுக்கான பின்னணி குறித்து பொலிசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் மீது வெறுப்பு கொண்ட நபர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக சீன பொலிசார் கூறுகின்றனர்.