மூதாட்டி தன்னை தாக்கிய சிறுத்தையை தடியால் விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இன்று காலை வனத்துறை அதிகாரிகள் வைத்திருந்த கூண்டுகளில் அந்த சிறுத்தை சிக்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..,
மும்பை ஆரேகாலனி விசாவா பகுதியில் வசித்து வரும் மூதாட்டி நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு உள்ள வரண்டா பகுதியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது, பின்னால் இருந்து வந்த சிறுத்தைப்புலி ஒன்று திடீரென மூதாட்டியை தாக்கியது. அந்த மூதாட்டி தைரியமாக தடியால் சிறுத்தைப் புலியை விரட்டினார்.
இதனால், சிறுத்தைப்புலி மிரண்டு போய் விலகி சென்றது. இந்நிலையில், குடும்பத்தினரும் மூதாட்டியின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்தனர். எனினும் அதற்குள் சிறுத்தைப்புலி அங்கு இருந்து தப்பி ஓடி விட்டது.
மூதாட்டி சிறுத்தைப் புலியை தடியால் விரட்டும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. கடந்த ஒரு வாரத்தில் ஆரேகாலனி பகுதியில் சிறுத்தைப்புலிகள் மனிதர்களை தாக்கும் 3-வது சம்பவம் இதுவாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கியது. அதற்கு முன் 3 வயது சிறுவன் தாக்கப்பட்டு இருந்தான். ஆரேகாலனி அருகே விலங்கினங்கள் வாழிடமான சஞ்சய் காந்தி தேசிய பூங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தையை பிடிப்பதற்கு ஆரேவில் நான்கு கூண்டுகளை வனத்துறை அதிகாரிகள் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை அந்த சிறுத்தை பிடிபட்டது.
இது குறித்து வன அதிகாரி நாராயண் மானே கூறுகையில்..,
“சிறுத்தையை பிடிக்க நாங்கள் ஆரேவில் நான்கு கூண்டுகளை அமைத்திருந்தோம். இன்று காலை எங்கள் குழு ஆய்வுக்குச் சென்றபோது சிறுத்தை 6 மணியளவில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் போரிவாலி தேசிய பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளோம்” எனக் கூறினார்.