ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 11 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ள நிலையில், இவ்விழாவில் திரையிட இரண்டு தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளது.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் “நெற்றிக்கண்”, “காத்துவாக்குல ரெண்டு காதல்” போன்ற படங்கள் உருவாகி வருகிறது.
அத்துடன் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள “கூழாங்கல்” படத்தையும் தயாரித்துள்ளார் நயன்தாரா. இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது.
ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் “கூழாங்கல்” என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் “கூழாங்கல்” திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது.
இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட “கூழாங்கல்” திரைப்படம் தேர்வாகி உள்ளது. நாளை தொடங்க உள்ள இவ்விழா, ஜூன் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே, நடிகர் சூர்யா நடித்துள்ள “சூரரைப் போற்று” திரைப்படமும் இவ்விருது விழாவில் திரையிட தேர்வாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.