ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த முன்னனி அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் அலெக்ஸ் டி மினாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக திகழ்பவர் அலெக்ஸ் டி மினார் (வயது 22). சர்வதேச டென்னீஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் 17-வது ரேங்கில் உள்ள இவர், ஒலிம்பிக் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்க இருந்தார்.
தற்போது ஸ்பெயின் நாட்டில் இருந்தபடி, ஒலிம்பிற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த அலெக்ஸ், நாளை நேரடியாக ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதனால் அவர் தனது பயணத்தை ரத்து செய்ததுடன், அங்கேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவுஸ்திரேலிய ஒலிம்பிக் குழு தலைவர் செஸ்டர்மேன் கூறுகையில்..,
“அலெக்ஸ் பங்கேற்க முடியாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சிறுவயது முதலே ஒலம்பிக்கில் விளையாடுவது அவரது கனவாக இருந்தது. ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் விளையாட இருந்தார். இரட்டையர் பிரிவில் அவருடன் விளையாட இருந்த ஜான் பியர்ஸ் எப்படி களம் காணப்போகிறார் என்பது குறித்து இன்னும் தெளிவாகவில்லை.
அலெக்சுடன் மற்ற வீரர்கள் நேரடி தொடர்பில் இல்லாததால் அவர்களின் டோக்கியோ பயணத்திற்கு எந்த தடையும் இல்லை. அவர்களுக்கு தொற்று இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது” என்றார்.
அலெக்ஸ் டி மினார் விலகியதையடுத்து அவுஸ்திரேலிய டென்னிஸ் அணி சார்பில் 5 வீரர்களும், 5 வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.