இலங்கையில் கொரோனா தொற்றின் உக்கிரத்தாண்டவம் தணிந்துவரும் நிலையில், டெங்கு நோயும், எலிக்காய்ச்சலும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருகையில்..,
கடந்த ஜுன் மாதம் முதல் கடந்த 20 ஆம் திகதிவரையான 04 மாதங்களிற்குள் இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.
குறித்த 250 நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் மாவநெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் மேல் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.