ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ரித்திமான் சஹா சிறப்பான தொடக்கம் தர தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பவர்பிளே முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதைத் தொடர்ந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐதராபாத் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் 9 வது ஓவரில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பாதியிலேயே வெளியேறினார்.
முதல் 10 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக அப்துல் சமாத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய ககிசோ ரபடா 3 விக்கெட்டுகளையும், நோர்ஜோ மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின்னர், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் பிரித்வி ஷா 11 (8) ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்து மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தவான் 37 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் 10.5 ஓவரில் 72 ரன்கள் எடுத்திருந்தது. தவான்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடைசி ஐந்து ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.
அதன்பின், ரிஷாப் பண்ட் அதிரிடியாக விளையாட 17.5 ஓவரில் டெல்லி அணி 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.
மேலும், பண்ட் 21 பந்தில் 35 ரன்கள் எடுத்தும் ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்தில் 47 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்கமால் இருந்தனர்.