விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படமும் பெரிதாக அவருக்கு கைகொடுக்கவில்லை.
அந்த வகையில், விஷால் நடிப்பில் இந்த ஆண்டு “சக்ரா” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், விஷாலின் அடுத்த லைன் அப் நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் உள்ளது.
தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் “எனிமி” படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியாக மிருனாளினி நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதையடுத்து விஷாலின் 31வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் நாயகனாக நடித்து, தயாரிக்கவுள்ளார் விஷால். பின்னர் விஷாலின் 32வது படத்தை “அடங்கமறு” படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார்.
இதற்கிடையில் “துப்பறிவாளன்” 2ம் பாகம் திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு அதில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகி பின்னர் விஷாலே படத்தை இயக்க முடிவு செய்தார். அதன் பின் இது குறித்து ஏதும் தகவல்கள் வராத நிலையில் படம் ட்ராப் என கிசுகிசுக்கள் வந்தன.
இந்நிலையில் “துப்பறிவாளன் 2” குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் விஷால். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் துப்பறிவாளன் 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.