கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும், அரசாங்கம் அதுதொடர்பில் நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானத்தை மேற்கொள்ளும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சராக நேற்றைய தினம் தமது கடைமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (17) சுகாதார அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்..,
நாடு பல மாதங்கள் மூடப்பட்டதன் பின்னரே திறக்கப்பட்டது. சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்கள் கடைமையாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு நாளாந்த வருமானத்தை பெறுவோர் தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்லை.
அத்துடன், கொவிட் தொற்றில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிப்பதுமேயாகும்.
மேலும், உலகில் பலமிக்க பொருளாதார வல்லமை கொண்ட நாடுகள் கூட கொவிட் தொற்று காரணமாக ஆரம்பத்தில் நாட்டை மூடிய போதிலும் மீண்டும் நாட்டை திறந்ததனால் இந்த தொற்றை எதிர்கொள்ள நேரிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.